திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.1 திருப்பிரமபுரம் (சீர்காழி)
பண் - நட்டபாடை
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
3
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
4
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
5
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
6
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
7
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
8
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
9
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
10
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - வினாவுரை
பண் - நட்டபாடை
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
    வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
    புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண்
    ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
1
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
    கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்
    புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோர்
    இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
2
கன்னிய ராடல் கலந்துமிக்க
    கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்
    புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்
    தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
3
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
    நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
    புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
    எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
4
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
    தையலோடுந் தளராத வாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
    புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை ஈசஎம்மான்
    எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணி வார்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
5
சங்கொலி இப்பிசு றாமகரந்
    தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்
    புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
    எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
6
காமனெ ரிப்பிழம் பாநோக்கிக்
    காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்
    புகலி நிலாவிய புண்ணியனே
ஈ.மவ னத்தெரி யாட்டுகந்த
    எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
7
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோள்
    இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்
    புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் நெல்லியாடும்
    எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
8
செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
    செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப்
    புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி
    இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
9
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த
    பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
    புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற
    எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
10
விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
    வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு
    பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
    நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்
    பாரொடு விண்பரி பாலகரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.9 திருவேணுபுரம் (சீர்காழி)
பண் - நட்டபாடை
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிழு வேணுபுர மதுவே.
1
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை
கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
(*)புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.

(*) குடைப்பாளை என்றும் பாடம்.
2
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்
படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.
3
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே.
4
நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.
5
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக்
கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்
தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
(*)விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.

(*) விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம்.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்
தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்
கலையாறொடு சுரதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.
8
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்
பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.
9
மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர்
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.

(*) குழுக்கள் என்றும் பாடம்.
10
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்
பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்
கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.19 திருக்கழுமலம் (சீர்காழி) - திருவிராகம்
பண் - நட்டபாடை
பிறையணி படர்சடை முடியிடைப்
    பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவ
    ளிணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி
    கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
    நலம்மலி கழல்தொழன் மருவுமே.
1
பிணிபடு கடல்பிற விகளற
    லெளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதம
    ரனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கரித்வள ரிளமதி
    புனைவனை உமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநல
    மலிகழ லிணைதொழன் மருவுமே.
2
வரியுறு புலியத ளுடையினன்
    வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புழைபொழில்
    விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி
    இரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை
    இருள்கெட நனிநினை வெய்துமதே.
3
வினைகெட மனநினை வதுமுடி
    கெனின்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு
    களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில
    வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலமமர்
    கதிர்மதி யினனதிர் கழல்களே.
4
தலைமதி புனல்விட அரவிவை
    தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளினன்
    நிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி
    லெரியுண மனமரு வினன்நல
கலைமரு வியபுற வணிதரு
    கழுமலம் இனிதமர் தலைவனே.
5
வரைபொரு திழியரு விகள்பல
    பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய
    கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன்
    அடியிணை தொதுவரு வினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட
    வுயருல கெய்தலொரு தலைமையே.
6
முதிருறு கதிர்வளர் இளமதி
    சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை
    யுடைபுலி அதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய
    கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி
    தொழுமறி வலதறி வறியமே.
7
கடலென நிறநெடு முடியவ
    னடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படையரு ளியபுக
    ழரவரை யினன்அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுடை யவன்விரி
    சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகடல் மறுகுடை
    யுயர்கழு மலவியன் நகரதே.
8
கொழுமல ருறைபதி யுடையவன்
    நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை
    விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன்
    அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி
    லெளிதிமை யவர்விய னுலகமே.
9
அமைவன துவரிழு கியதுகி
    லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை
    சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம
    ரிறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலி
    லுயர்நெறி நனிநணு குவர்களே.
10
பெருகிய தமிழ்விர கினன்மலி
    பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை
    கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய
    பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி
    யுடையவர் விதியுடை யவர்களே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.24 சீர்காழி
பண் - தக்கராகம்
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே.
1
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.
2
தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.
3
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
4
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
காடே றிச்சங் கீனுங் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.
5
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.
6
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே.
7
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.
8
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
கூற்ற மறுகக் குமைத்த குழகரே.
9
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே.
10
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைக்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா இருப்பரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.30 திருப்புகலி (சீர்காழி)
பண் - தக்கராகம்
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.
1
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்
தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.
2
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்
பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே.
3
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்
புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே.
4
காதார்கன பொற்குழை தோட திலங்கத்
தாதார்மலர் தண்சடை யேற முடித்து
(*)நாதான்உறை யும்மிட மாவது நாளும்
போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.

(*) நாதன் என்பது நாதான் என நீண்டது.
5
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்
கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.
6
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்
செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே.
7
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல
எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற
கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே.
8
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே.
9
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்
புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.
10
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்
புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.34 சீர்காழி
பண் - தக்கராகம்
அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே.
1
திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.
2
இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே.
3
ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவரின்பே.
4
பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கி
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண் டவரிடே.
5
கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையால் தொழுவார் தலையாரே.
6
திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே.
7
அரக்கன் வலியொல் அடர்த்து
வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.
8
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.
9
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.
10
நலமா கியஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.47 திருச்சிரபுரம் (சீர்காழி)
பண் - பழந்தக்கராகம்
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.
1
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.
2
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.
3
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.
4
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்
கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.
5
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.
6
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.
7
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.
8
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதன்னே
நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.
9
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.
10
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.60 திருத்தோணிபுரம் (சீர்காழி)
பண் - பழந்தக்கராகம்
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.
1
எரிசுறவங் கழிக்கானல் இளங்குரகே என்பயலை
அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.
2
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.
3
காண்டகைய செங்காலொன் கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே.
4
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
5
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.
6
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.
7
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே.
8
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.
9
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
10
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.63 திருப்பிரமபுரம் (சீர்காழி) - பல்பெயர்ப்பத்து
பண் - தக்கேசி
எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தான்
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.
1
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே.
2
நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே.
3
சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
வெங்தோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே.
4
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே.
5
கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே.
6
முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே.
7
எருதேகொணர்கென் றோpயங்கை இடுதலையேகலனாக்
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே.
8
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே.
9
நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
குhலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே.
10
கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.
11
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே.
12
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.66 திருச்சண்பைநகர் (சீர்காழி)
பண் - தக்கேசி
பங்கமேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்
அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே.
1
சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே.
2
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே.
3
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே.
4
கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே.
5
மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான்
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இருளைப்புரையும் நிறத்திலரக்கன் றனையீடழிவித்து
அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்
மருளைச்சுரம்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்
தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே.
8
மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும்
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே.
9
போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே.
10
வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.74 திருப்புறவம் (சீர்காழி)
பண் - தக்கேசி
நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1
உரலன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக
இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.
2
பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
3
நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
4
செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.
5
பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சுழ்ந்தழகார் புறவம்பதியாக
என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
6
உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.
7
விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
திண்டோளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
எண்டோளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
8
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.
9
ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
10
பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக
மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.75 திருவெங்குரு (சீர்காழி)
பண் - குறிஞ்சி
காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
    கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
ஓலம திடமுன் உயிரொடு மாள
    உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
    மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1
பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
    பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
    பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி
    மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
2
ஓரியல் பில்லா உருவம தாகி
    ஒண்டிறல் வேடன துரவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்
    கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று
    நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
3
வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
    மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டனி சடையர் விடையினர் பூதங்
    கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்
    பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
4
சடையினர் மேனி நீறது பூசித்
    தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
கடைதொறும் வந்து பலியது கொண்டு
    கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
படையது ஏந்திப் பைங்கய் கண்ணி
    உடையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
5
கரைபொரு கடலில் திரையது மோதக்
    கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி
    ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
    புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
6
வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
    மறுகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
    கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
    நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
7
பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
    பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
    ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
    கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
8
ஆறடைச் சடையெம் அடிகளைக் காண
    அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
    செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
    கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
9
பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
    பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடடை மலராள் பொருட்டு வன்தக்கன்
    எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
    கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
10
விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
    நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
    பாடியு மாடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானங் கொடுவர வேறி
    வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.79 திருக்கழுமலம் (சீர்காழி)
பண் - குறிஞ்சி
அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
    அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
    மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
    பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
    கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
    படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
    மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
2
எண்ணிடை யொன்றினர் இரண்டின ருரவம்
    எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
    வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
    பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
3
எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
    ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
    தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
    மஞ்சுற நிமிர்ந்ததோர் வடவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
4
ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
    உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
    படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்
    நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
5
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
    முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
    பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்னியல் நறுமலர் புனலொடு தூபஞ்
    சாந்தமு மேந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
6
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
    குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
    நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
    மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
7
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
    பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோள்
பயம்பல படவடர்த் தருளிய பெருமான்
    பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
    வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
8
விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
    வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
    பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்
    மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
9
ஆம்பல தவமுயன் றாவுரை சொல்லும்
    அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
    மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
    தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
    கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
10
கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
    கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
    வருங்கலை ஞானசம் பந்தன் தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
    உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
    விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.81 சீர்காழி
பண் - குறிஞ்சி
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.
1
துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.
2
ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
3
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.
8
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலம் பதிபோலும் இரந்தோர்க் கெந்தாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.
9
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிச்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
10
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈ.சன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.90 திருப்பிரமபுரம் (சீர்காழி) - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
அரனை உள்குவீர், பிரம னூருளெம்
பரனை யேமனம், பரவி உய்ம்மினே.
1
காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணுவின் கழல், பேணி உய்ம்மினே.
2
நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.
3
அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
வெங்கு ருமன்னும், எங்க ளீசனே.
4
வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே.
5
பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.
6
கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.
7
நறவ மார்பொழிற், புறவம் நற்பதி
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.
8
தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே.
9
அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே.
10
தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.
11
தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.
12
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.97 திருப்புறவம் (சீர்காழி)
பண் - குறிஞ்சி
எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே.
1
மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.
2
வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.
3
துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.
4
தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.
5
கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.
6
எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டதிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.
7
பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும்
அரக்கன்திண்டோள் அழிவித்தானக் காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.
8
மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங்
கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.
9
வையகம்நீர்தி வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.
10
பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னியஈ.சன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசைஈ.ரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.102 சீர்காழி
பண் - குறிஞ்சி
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.
1
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோள்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லால்களான அடையாவே.
2
இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
றுளகப்பாடும் அடியார்க்குறநோய் அடையாவே.
3
எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.
4
மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.
5
குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.
6
இப்பதிகத்தின் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.
8
ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.
9
மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே.
10
வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.104 திருப்புகலி (சீர்காழி)
பண் - வியாழக்குறிஞ்சி
ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.
1
ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.
2
ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விருப்பும் புகலியதே.
3
வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.
4
சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.
5
மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.
6
மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.
7
வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
நல்லிட மென்றரியான் நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.
8
தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.
9
வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.
10
வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.109 திருச்சிரபுரம் (சீர்காழி)
பண் - வியாழக்குறிஞ்சி
வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே.
1
அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.
2
பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.
3
நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயல் சிரபுரமே.
4
அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குரந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.
5
கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.
6
வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே.
7
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.
8
வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே.
9
வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.
10
அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.117 திருப்பிரமபுரம் (சீர்காழி) - மொழிமாற்று
பண் - வியாழக்குறிஞ்சி
காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்
தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்
பீட தண்மணி மாடப் பிரம புரத்தாரே.
1
கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.
2
கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.
3
உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே.
4
கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.
5
சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.
6
காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே.
7
நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.
8
இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.
9
அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே.
10
கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.
11
கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்
செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே.
12
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.126 திருக்கழுமலம் (சீர்காழி) - திருத்தாளச்சதி
பண் - வியாழக்குறிஞ்சி
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்
    பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுக்கு
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
    சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
    தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
    காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
1
பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
    பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தால் நச்சிப்போல் தொடந்தடர்ந்த வெங்கணே
    றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
    வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
    காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.
2
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
    சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்
    பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
    போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
    காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
3
அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
    தாறேவேறே வானாள்வார் அவரவ திடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
    மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
    மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
    காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
4
திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
    சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
    போரேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
    தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
    காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.
5
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
    சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
    கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
    பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
    காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.
6
பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
    பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
    மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
    சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கும்ட நற்பொருள்
    காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
7
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
    சேலேவாரா வாரிசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
    பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்
டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
    காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
    காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.
8
பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
    பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
    னோதானோதான் அஃதுணரா துரவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
    றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
    காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
9
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
    தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
    கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
    போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த மைம்புனற்
    காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
10
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
    கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
    தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்
    டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
    மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.127 சீர்காழி - திருஏகபாதம்
பண் - வியாழக்குறிஞ்சி
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
1
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.
2
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.
3
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
4
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.
5
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.
6
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மேன்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மேன்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மேன்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மேன்னில்.
7
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.
8
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்
தசமுக னெறிதர வூன்று சண்பையான்.
9
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே.
10
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.
11
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.
12
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.128 திருவெழுகூற்றிருக்கை
பண் - வியாழக்குறிஞ்சி
ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை
5
ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்
10
நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்
15
கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்
முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து
20
நான்மறை யோதி ஐவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
25
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
30
வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றேhன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை
35
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறை முதல் நான்கும்
40
மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
45
அனைய தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே.
47
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.129 திருக்கழுமலம் (சீர்காழி)
பண் - மேகராகக்குறிஞ்சி
சேவுயருந் திண்கொடியான் திருவடியே
    சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்னையொடு நான்முகன்றான்
    வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
    செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
    கண்காட்டுங் கழுமலமே.
1
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
    மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
    அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
    இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
    பாட்டயருங் கழுமலமே.
2
அலங்கல்மலி வானவருந் தானவரும்
    அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
    கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்
    கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
    மெய்யர்வாழ் கழுமலமே.
3
பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
    சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
    சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
    சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
    மகிழ்வெய்துங் கழுமலமே.
4
ஊர்கின்ற அரவமொளி விடுதிங்
    ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
    செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
    மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
    சுதைமாடக் கழுமலமே.
5
தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து
    தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
    ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
    அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
    அகம்பாயுங் கழுமலமே.
6
புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
    நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
    வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
    கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
    புள்ளிரியுங் கழுமலமே.
7
அடல்வந்த வானவரை யழித்துலகு
    தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
    பணிகொண்டோன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா
    வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
    கரைகுவிக்குங் கழுமலமே.
8
பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
    கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
    வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
    கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
    நின்றேத்துங் கழுமலமே.
9
குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
    மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
    வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
    யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
    மேல்படுக்குங் கழுமலமே.
10
கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
    ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
    பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
    தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
    அடிசேர முயல்கின்றாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com